×

தன்மானத்தை அடகு வைக்க மாட்டேன்: சீமான்

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்  போட்டியிடும் அபிநயாவுக்கு வாக்கு கேட்டு சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், “என் வீட்டையும் காட்டையும் அடமானம் வைப்பேன். இனமானம், தன்மானத்தை வைக்க மாட்டேன். பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் 36 லட்சம் வாக்குகளை தனி ஒருவனாக பெற்றிருக்கிறேன். இடைத்தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் 2026ல் அபிநயா தான் விக்கிரவாண்டி வேட்பாளர்.

உங்களுக்கு மனச் சான்று இருக்கா மு.க.ஸ்டாலின்? எல்லை பாதுகாப்பு வீரர்கள், விவசாயிகள், மீனவர்கள் இறந்தபோது இந்த அரசு நிவாரணம் அளித்ததா? தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நிவாரணமாக என்ன கொடுத்தீங்க? குடும்பத் தலைவிக்கு ரூ.1000, குடிச்சிட்டு செத்தா ரூ.10 லட்சம். இது என்ன சரித்திர சாதனையா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் குற்றம். குடிப்பதும் குற்றம். தமிழ்ச் சமுதாயத்தை எதை நோக்கி நகர்த்துகிறீர்கள் நீங்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். இந்த தேர்தலில் மும்முனை போட்டி. பாமகவுக்கும் திமுகவுக்கும் போட்டியில்லை, நாம் தமிழர், திமுக இடையேதான் தான் போட்டி.  இந்த தேர்தலில் திராவிடமா, தமிழ் தேசியமா என்பது தான் போட்டி. நாட்டை ஆளும் பாஜக ஏன் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக பின்னாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக பின்னால் ஒளிந்துக்கொள்கிறது.இந்தியாவிலேயே 1.1 விழுக்காடு வாக்கு வாங்கிய கட்சி தொடர்ந்து முன்னேறி 8.19 விழுக்காடு வாக்கு வாங்கி முன்னேறி வந்துள்ளது.

ஏன் அரசு கள்ளுக்கடை திறப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பனம்பால், தென்னம்பால் விற்பனை செய்யப்படும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தடை உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக இரண்டு கட்சிக்கு மது ஆலைகள் உள்ளது. அதனால் டாஸ்மாக் கடையை மூடமாட்டார்கள்.. ஒண்டிக்கு ஒண்டி வறீயா?... சாராயக்கடையா? கள்ளுக்கடையானு பாப்போமா.?” எனக் கேள்வி எழுப்பினார்.