×

"வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்" - அன்புமணி வலியுறுத்தல்!!

 

“வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 91.17 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.24% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர் கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன். 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

கடந்த காலங்களைப் போலவும், நடப்பாண்டின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளைப் போன்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களிலும் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி 10 இடங்களைப் பிடித்த வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய அனைத்துமே வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும். அதேபோல், கடைசி 15 இடங்களை பிடித்தவற்றில் 13 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும்.

35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. அதற்காக வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தைக் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.