×

மதிய உணவு உண்ட அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு! தென்காசியில் பரபரப்பு

 

தென்காசி அருகே செங்கோட்டையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய உணவு உண்ட அரசு பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார்- ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் மகனான அசோக்  (9) செங்கோட்டையில் உள்ள கச்சேரி காம்பவுண்ட் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இன்று மதியம்  அவன் வீட்டில் இருந்து கொண்டு வந்த சாம்பார் சாதம் சாப்பிட்டுள்ளான். உணவு அருந்திய சில மணி நேரத்திலேயே அசோக்  வாந்தி எடுத்த படி வலியால் துடித்துள்ளான்.  

ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்து  அசோக்கை  சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அசோக்கை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தென்காசியில் அசோக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிர் இழப்புக்கு  உணவில் வேறு ஏதேனும் கலந்து உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..