×

சக மாணவர்கள் முன்னிலையில் தாலி கட்டிக்கொண்ட மாணவர்கள்! பள்ளியில் அரங்கேறிய கொடுமை

 

குளித்தலை அருகே தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காதலித்த சக மாணவிக்கு தாலி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரை சேர்ந்த 16 வயது சிறுமி, தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் சக வகுப்பில் மனச்சனம்பட்டியை சேர்ந்த  16 வயது சிறுவனும் பயின்று வருகிறார். மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 27ஆம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டி உள்ளார். மேலும் தாலி கட்டியதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் சிறுவனிடம் கேட்டபோது இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவே சிறுமி, சிறுவனுடன் மாயமாகியுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் மாயமாகிய சிறுவன், சிறுமியர் இருவரையும் இன்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் சிறுவனை குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று பள்ளிக்கூடம் திறந்ததும் சிறுமியின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவன், மாணவிக்கு தாலி கட்டி உள்ளதாகவும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை சரியான முறையில் வழி நடத்தாமல் என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் வழங்க வேண்டுமென்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுமியின் உறவினர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்க வேண்டும் எனவும், ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே பள்ளி அமைந்துள்ளதால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மேலும் இது போன்ற சம்பவங்கள் பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.