×

மகளுக்கு பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை

 

மணப்பாறை அருகே பிறந்து சில நாட்களான குழந்தையை கிணற்றில் துாக்கிப் போட்டு கொலை செய்த தாத்தா போலீசில் சரணந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ஜேக்கப் (வயது 49). இவரது மனைவி கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் மரிய வினோதினிக்கு (வயது 28), திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மரியவினோதினி கர்ப்பமானார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, வயிற்றில் கட்டி என்று சமாளித்துள்ளார். இவருக்கு கடந்த, 6-ம் தேி வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அந்த குழந்தையை சிவப்பு பையில் போட்டு கட்டி, செக்கனத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிராம பொதுகிணற்றில் மரியஜேக்கப் வீசி கொலை செய்துள்ளார். பிறந்த குழந்தை காணாதது குறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக்குழுவினர், மரிய வினோதினியை மீட்டு, திருச்சி மன்னார்புரம் பெண்கள் காப்பகத்தில் தங்க வைத்தனர். ஊர்க்காரர்கள் தவறாக பேசுவார்கள் என்பதால் தனது மகளின் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டதாக கூறி, மரிய ஜேக்கப், வையம்பட்டி போலீசில் சரணடைந்தார். 

தந்தையுடன் வசித்து வந்த மகள் கர்ப்பமானது குறித்தும், குழந்தையை கொலை செய்தது குறித்தும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை (புதன்கிழமை) வருவாய்த்துறையினர் முன்னிலையில் கிணற்றில் இருந்து குழந்தையின் சடலத்தை வையம்பட்டி போலீசார் மீட்க உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.