×

ஓட்டலுக்குள் புகுந்த அரசு பேருந்து! ஒருவர் பலி

 

ஆத்தூர் அருகே ராமநாதபுரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து சாலையோர இருந்த ஓட்டலுக்குள் புகுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமநாதபுரத்தில் இருந்து திருப்பூருக்கு திண்டுக்கல் வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து திண்டுக்கல் பழனி சாலையில் முத்தனம் பட்டி பிரிவு என்ற இடத்தில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையின் குறுக்கே சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். லேசாக மழை பெய்து கொண்டிருந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.  இதில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சின்னமல்லணம்பட்டியை சேர்ந்த  மொக்கசாமி மகன் சின்னு (55)  என்பவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

பயணிகள் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.