×

வரும் 18ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்

 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி திருச்சிக்கு வந்து விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி சென்னை கேலே இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக வருகை புரிந்திருந்தார். இதைத்தொடர்ந்து 20 மற்றும் 21ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்,  ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்  மோடி கலந்து கொண்ட நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்த அவர் 28ஆம் தேதி தூத்துக்குடியில் நல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் கடந்த 4ம் தேதி மீண்டும் நான்காவது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். அத்துடன் நந்தனத்தில் நடந்த பாஜக பொது கூட்டத்தில் கலந்து கொண்டார்.இந்நிலையில் பிரதமர் மோடி 5 ஆவது முறையாக  மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு அவர் வருகி புரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவார் என்றும் கூறப்படுகிறது.