×

வீடுகளுக்கு மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டருக்கு தடையில்லை- ஐகோர்ட்

 

வீடுகளில் மின் பயன்பாட்டை அளவிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய 19000 ஆயிரம் கோடி மதிப்பிலான டான்ஜெட்கோ பிறப்பித்த டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் பயனாளிகளின் வீடுகளில்  பொருத்துவதற்காக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டான்ஜெட்கோ டெண்டர் கோரியது. இந்த டெண்டரின் மதிப்பு 19000 கோடி ஆகும். இந்த டெண்டர் ஆவணங்களில், தொழில்நுட்ப டெண்டர் மற்றும் நிதி டெண்டர் ஆகிய இரண்டையும் திறந்து ஒப்பந்ததாரரை இறுதி செய்த பிறகு, அதைவிட குறைந்த தொகையில் டெண்டர் கோரும் வகையில் எதிர் ஏலம் நடைமுறையை பின்பற்றப்படும் என  குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர் ஏலம்  நடைமுறை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி ஹைதராபாத்தைச் சேர்ந்த எஃபிகா (EFICA) என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி எதிர் ஏல நடைமுறை டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, மின் மீட்டர்கள் கொள்முதல் தொடர்பான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டான்ஜெட்கோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,மின் பகிர்மான கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வாதிட்டனர். டான்ஜெட்கோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

எதிர் ஏலத்திற்கு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் எந்த விதத்திலும் தடைவிதிக்கவில்லை என்றும், சட்டத்திற்குவிரோதமானது என்றும் தெரிவிக்கவில்லை என்பதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.