×

சென்னையில் பல்வேறு வாகனங்களுக்கு வேக வரம்பை அறிவித்தது போக்குவரத்து காவல்துறை

 

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு வாகனங்களுக்கு வேக வரம்பை அறிவித்தது.

சென்னையில் பெருநகரத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கிவருகின்றன. இந்த சூழ்நிலையில் சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையை பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழிவகுக்கும் என்றும்,இதனால் குறிப்பாக விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால் வேக வரம்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம். இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும்,  இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும், இரண்டு சக்கர வாகனங்கள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலேயே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.