×

சென்னையில் 2 நாட்களுக்கு மின்சார ரயில் சேவை ரத்து.. 

 

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்றும் , நாளையும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை  நேற்றைய தினம் வரை இரவு நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வார இறுதி நாட்களான இன்றும் ( சனிக்கிழமை), நாளையும் ( ஞாயிற்றுக்கிழமை) பகல்  மற்றும் இரவு நேரங்களிலும்  மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என ஏற்கனவே ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.  

முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக 20 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.  அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரத்துக்கு இரவு 11. 59 மணிக்கும், மறு மார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 12.45 மணிக்கும் கடைசி மின்சார ரயில் இயக்கப்படுகின்றன.  

அதேபோல் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டுக்கு இரவு 11.55 மணிக்கும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரிக்கு  இரவு 11 மணிக்கு கடைசி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும்   ஜூலை 29 (திங்கள் கிழமை) முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பகல் நேர மின்சார ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயங்கும் எனவும் அதேநேரம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் இந்த வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேர மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.