×

வேலை இல்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்- டிடிவி தினகரன்

 

பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று கும்பகோணம் வந்திருந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். சிறு தொகைக்கு கூட கொலை செய்யும் அளவிற்கு கூலிப்படைகளாகி வருகின்றனர். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் சட்டம்  ஒழுங்கு சரியாகும். 

அதிமுக ஒன்றிணைவதை அதிமுகவினர் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால்  முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் இதுகுறித்து தன்னை  சந்திக்கவில்லை. காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. அவர்களிடம் கேட்டு தமிழக முதல்வர் தண்ணீர் பெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொது பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசிடம் பேசுவீர்களா? என கேட்டதற்கு நிச்சயம் இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம் என தினகரன் தெரிவித்தார்.