×

”இத்தகைய துயரச் சம்பவங்கள் இனியும் நிகழாது இருக்க செயல்படுவோம்”- உதயநிதி ஸ்டாலின்

 

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆற்றொணா துயரத்தைத் தருகின்றன. இத்துயர நிகழ்விற்கு எதிரான நடவடிக்கைகளை கழக அரசு எடுத்துவரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் உயிரிழந்தோரின் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினோம். அப்போது அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நிவாரண தொகையாக வழங்கினோம்.

இந்த சம்பவத்தில், உயிரிழப்பை சந்தித்த குடும்பங்களின் எதிர்காலத்திற்கு அரசு நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும் உறுதி அளித்தோம். இத்தகைய துயரச் சம்பவங்கள் இனியும் நிகழாது இருக்க, அரசு – இயக்கங்கள் - பொதுச் சமூகம் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.