×

விழுப்புரத்தில் பிறந்து நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரமுத்துவேல்

 

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று மாலை தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியடைந்தனர்

நிலவின் தென் துருவம் என்பதை மிக முக்கிய பகுதியாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நிலவின் இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உலக நாடுகள் முயற்சி செய்துவரும் நிலையில், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகமே உற்றுநோக்கும் தருணத்தில் இன்று சந்திரயான் - 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

இந்த திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து படித்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானி. சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978- ஆம் ஆண்டு பிறந்தவர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்னிக்கில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். 

திருச்சி REC கல்லூரியில் பொறியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற வீரமுத்துவேல், 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சந்திராயன் மூன்று வெற்றிகரமாக  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை கொண்டாடும் வகையில் அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் வஉசி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.