தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 1,021 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,021 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, இந்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற கணிப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் ஐ.டி.சி. ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 989 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,490 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 108 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.276.64 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.04 லட்சம்  கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,020.80 புள்ளிகள் குறைந்து 58,098.92 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 302.45  புள்ளிகள் சரிவு கண்டு 17,327.35 புள்ளிகளில் முடிவுற்றது.