சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நஷ்டம்..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 127 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கியை கையகப்படுத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம் போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர் கிரிட் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

வாராக் கடன் குறைப்பு…. ரூ.1,112 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி …

மும்பை பங்குச் சந்தையில் இன்று 923  நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,713  நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.253.54 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.96 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 126.76 புள்ளிகள் உயர்ந்து 57,653.86 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 40.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,985.70 புள்ளிகளில் முடிவுற்றது.