டிசம்பர் காலாண்டுக்கு சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

 
சிறு சேமிப்பு திட்டங்கள்

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுக்கு (அக்டோபர்-டிசம்பர்) தேசிய சேமிப்பு பத்திரம், பி.பி.எப். உள்ளிட்ட சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய நிதியமைச்சகம் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

தேசிய சேமிப்பு பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எப். உள்ளிட்ட அனைத்து சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை  மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கு  சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. அதில் இந்த காலாண்டுக்கு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து 6வது காலாண்டாக நடப்பு காலாண்டிலும் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள்

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பி.பி.எப். மற்றும் என்.எஸ்.சி. ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இன்றி முறையே 7.1 சதவீதம் மற்றும் 6.8 சதவீதமாக நீடிக்கிறது. பெண் குழந்தைகளுக்கான  சுகன்ய சம்ரிதி திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக நீடிக்கிறது. 

ரொக்கம்

1 ஆண்டு குறித்த கால டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இன்றி  5.5 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான (5 ஆண்டு காலம்) வட்டி விகிதம்  7.4 சதவீதமாக உள்ளது. அதேசமயம் சேமிப்பு டெபாசிட்களுக்கான ஆண்டு விகிதம் தொடர்ந்து 4 சதவீதமாக நீடிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.