இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

 
modi

சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்ததற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. இதனையடுத்து இந்தியா மற்றும் இஸ்ரோவுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

இந்த நிலையில், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான்-3 சாதனைக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவித்த உலகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் விண்வெளித் திட்டம் எப்போதும் உலகளாவிய நல்வாழ்வை மேம்படுத்த முடிந்ததைச் செய்யும். ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மடகாஸ்கர் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.