2வது முறையாக நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் - இஸ்ரோ புது தகவல்

 
Vikram lander

நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை மீண்டும் மேலே எழுப்பி தரையிறக்கி சோதனை செய்துள்ளதாக  இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.  இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி மாலை 6.4 மணியளவில்  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து  நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.  பள்ளம் போன்ற தடைகள் இருந்தால், தாமாகவே பாதையை மாற்றி பக்குவமாக பயணித்து வருகிறது  ரோவர். நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் உறுதி செய்துள்ளது.  சந்திரயான் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு Sleep mode-க்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  


இந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய லேண்டர் முதன் முதலாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தரையிறங்கிய இடத்தில் இருந்து சிறிது தூரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும்,  30 முதல் 40 செ.மீ. வரை பாதுகாப்பாக நகர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
14 நாட்கள் செயல்பாடு முடிந்த நிலையில் இஸ்ரோ கூடுதல் பரிசோதனை முயற்சியாக விக்ரம் லேண்டரை நகர்த்து சோதனை மேற்கொண்டுள்ளது.