நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய ‘ஜெய்பீம்’...

 
ஜெய்பீம்

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில்  சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர்.  த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இருளர் இன மக்களின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டிய ஜெய்பீம், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்காடிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டது.

ஜெய்பீம்

செய்யாத தவறுக்காக காவல் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்படும் நபர். கணவரின் இறப்புக்காக சட்டப் போராட்டம் நடத்தும் பழங்குடியின பெண்ணின் வாழ்க்கையே ஜெய்பீம்.  ஜெய்பீம் படம் ஏற்கனவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு  கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே  சமீபத்தில் ஆஸ்கார் விருது அமைப்பு தனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை வெளியிட்டு இருந்தது.  மேலும் ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பிடித்துள்ளது.

jai-bhim-33f

இந்த நிலையில் தற்போது  9வது  நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில்  3 விருதுகளை  வென்றுள்ளது.  இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘ஜெய்பீம்’ படத்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது  சூர்யாவுக்கும் , சிறந்த நடிகைக்கான விருது  லிஜோமோல் ஜோஸுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நொய்டா திரைப்பட விழாவில் 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், தமிழ் திரைப்படமான ஜெய்பீம் படத்திற்கு விருது கிடைத்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.