அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் மகேஷ் பாபு..
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மகேஷ்பாபு. பல வெற்றி படங்களை கொடுத்த மகேஷ் பாபுவுக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருகிறது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு காலில் அடிபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள அமெரிக்க செல்ல இருக்கிறார் எம்றும், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மறுபுறம் அவர் ஹைதராபாத்திலேயே சிகிச்சை எடுத்துகொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. சிகிச்சை முடிந்து சிறிது காலம் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகே படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படப்பிடிப்புகள் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து மகேஷ் பாபு தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
ஆனால் , மகேஷ்பாபு தற்போது நடித்து வரும் ’சர்க்காரு வாரி பாட்டா’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். மேலும் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்விற்குப் பின்னர் மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள். பரசுராம் இயக்கி வரும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மகேஷ் பாபு, நேற்று முன்தினம் ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.