"நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது" - ரஜினிகாந்த் அறிக்கை!
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகிப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு நாளை வழங்கப்பட உள்ளது. தமிழில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு ரஜினிகாந்த் இந்த விருதை பெறுகிறார். கடந்த 2019ஆம் ஆண்டே இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறாத நிலையில், நாளை டெல்லியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "தாதா சாகிப் பால்கே விருது பெறுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் எனது குரு கே.பாலச்சந்தர் இல்லாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகில் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.
இரண்டாவது என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE ஆப் மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE ஆப்பை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.