உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி... நடிகர் ஷாருக்கானின் மகன் கைது!
மும்பையில் இருந்து புறப்பட்ட எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடந்ததாக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட காடலியா குருசேஸ் நிறுவனத்தின் 'எம்பிரஸ்' உல்லாசக் கப்பலின் முதல் பயணம் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளுடன் இந்த கப்பல் 3 நாள் பயணத்தை தொடங்கியது. அதில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொண்டு பயணிகள் பார்ட்டி நடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கப்பலில் ஏறிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல அதிகாரி தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடுக்கடலில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்கள் சினிமா மற்றும் பேஷன் துறையை சேர்ந்தவர்களாக இருந்தது தெரிய வந்ததையடுத்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கிரே ஆர்க் என்ற பெயரில் கப்பலில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தான் போதைப்பொருள் பார்ட்டி நடந்துள்ளது. அதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனும் இருந்துள்ளார்.
தகவல் அறிந்த அதிகாரிகள் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆரியன் கான், அவரது நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 13 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்ததால் அனைவரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.