பெயில் ஆக்கிடுவேன் என்று மிரட்டி 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -கணித ஆசிரியர் சிறையிலடைப்பு
பரிட்சையில் பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி 15 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானவரெட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். உதவி தலைமை ஆசிரியராகவும் கணக்கு ஆசிரியராகவும் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த துளசிராமன்(வயது58) பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த மூன்று மாதங்களாக பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதைப்பற்றி யாரும் பெற்றோரிடம் சொன்னால், பரீட்சையில் பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார். இதற்கு பயந்துகொண்டே மாணவிகள் யாரிடமும் சொல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதியன்று துளசிராமன் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரம் அடைந்த மாணவி பெற்றோரிடம் இது பற்றி சொல்ல போகிறேன் என்று துணிச்சலாக சொல்லி இருக்கிறார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் துணிச்சல் வந்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இதை கேட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதை அறிந்த துளசிராமன், சம்பவம் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்று உணர்ந்துடந்த12-ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்துச் சென்றிருக்கிறார் .மருத்துவ விடுப்பு முடிந்து நேற்று பள்ளிக்கு வந்திருக்கிறார். இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு சென்று துளசிராமனிடம் பாலியல் தொல்லை கொடுப்பது சம்பந்தமாக கேட்டிருக்கிறார்கள்.
அப்போது ஆத்திரமடைந்த துளசிராமன், பெற்றோரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டதால், துளசிராமனை போக்சோ சட்டம் , கொலை முயற்சி வழக்கில் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.