8 வயது சிறுமிக்கு 6 மாத காலமாக பாலியல் தொல்லை - மாநகராட்சி துப்புரவு பணியாளர் போக்சோவில் கைது

 
pocso arrest

8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்குள் நேற்று மாலை 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு உள்ளே சென்ற நபர்கள் சிலர், சிறுமியிடம்  ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அடித்து இழுத்து வந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

chennai

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில் அந்த நபர் ஆலந்தூர் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன்(49) என்பதும், இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 8 மாத காலமாக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும், கடந்த ஆறு மாத காலமாக சிறுமியிடம் பழகுவது போல பேசி பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 8 வயது சிறுமிக்கு 49 வயதான நபர் 6 மாத காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.