மனைவிக்கு வாங்கி வந்த விஷம் கலந்த உணவை குழந்தைகள் சாப்பிட்ட பரிதாபம்
மனைவிக்கு வாங்கி வந்து கொடுத்த விஷம் கலந்த உணவை குழந்தைகள் சாப்பிட்ட பரிதாபம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு குழந்தை உயிரிழந்துவிட, ஒரு குழந்தை ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் விஜயபுரா மாவட்டம் கோனல் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர்- சாவித்திரி தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் சிவராஜ் என்ற ஆண் குழந்தையும் இருந்தது .
சந்திரசேகருக்கு கடன் நெருக்கடி அதிகம் இருந்ததால் அந்தக் கடனை எல்லாம் அடைத்து விட நிலத்தை விற்க முயன்றிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகராறில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாவித்திரி பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர வேண்டும் என்று சந்திரசேகர் மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போதும் சந்திரசேகருக்கும் சாவித்திரிக்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . நிலம் விற்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் சாவித்திரியின் குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதைப் பார்த்து பதறிய சாவித்திரியும் அவரது பெற்றோரும் குழந்தைகளை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளனர் . அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு வயது குழந்தை உயிர் இழந்து விட்டது. 5 வயது சிறுமிக்கு மட்டும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் . ஆபத்தான நிலைமையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார் .
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் தாலிகோட்டே போலீசார். மனைவி மீதிருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட, ஹோட்டலில் சாப்பாடு வாங்கி அதில் விஷத்தைக் கலந்து வந்து கொடுத்தேன். அவர் சாப்பிட்டதும் அவர் இறந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், அந்த உணவை அவர் சாப்பிடுவதற்கு முன்பு ஆவலாக குழந்தைகள் சாப்பிட்டு இருக்கிறார்கள். அதனால்தான் இப்படி ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தாலிகோட்டே போலீசார் சந்திரசேகரை கைது செய்திருக்கிறார்கள்.
மனைவிக்கு வாங்கி வந்த விஷம் கலந்த உணவை குழந்தைகள் சாப்பிட்டதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கும் சம்பவம் கோனல் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.