மருத்துவக்கல்லூரி மாணவி ஆணவக் கொலை! எலும்புகளை தேடும் போலீஸ்
வேறு சாதி இளைஞரை காதலித்ததால் மருத்துவக்கல்லூரி மாணவியை அடித்து ஆணவக் கொலை செய்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடுமை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தண்ட் மாவட்டத்தில் உள்ள மகிபா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி. மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் சுபாங்கி அதே கிராமத்தைச் சேர்ந்த தருண் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு , பின்னர் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். சுபாங்கியின் காதல் விவகாரம் அவரின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. வேறு சாதி பையன் என்பதால் அந்த காதலை கைவிடுமாறு மகளிடம் கூறியிருக்கிறார்கள் .
பெற்றோரின் பேச்சை மீறி தருணை காதலித்து வந்திருக்கிறார் சுபாங்கி.
இதனால் பெற்றோர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சுபாங்கிக்கும் வேறொரு இளைஞனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்கள். இதை தெரிந்து கொண்ட சுபாங்கி மணமகன் வீட்டார் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தன் காதல் விவகாரம் குறித்து பேசி திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.
ஊரார் முன்பாக மகள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கலங்கிய பெற்றோர் , வீட்டில் இருந்த மகளை கொடூரமாக தாக்கி ஆணவக் கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஊராருக்கு சுபாங்கி இறந்த தகவல் தெரிந்தால் போலீஸ் -வழக்கு என்று பிரச்சனைகள் வந்துவிடும் என்று நினைத்து
சுபாங்கியின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் தீ வைத்து எரித்திருக்கிறார்கள். சாம்பல் தடயம் கூட இருக்க கூடாது என்று சாம்பல் மற்றும் எலும்பு துண்டுகளை யாருக்கும் தெரியாத ஓரிடத்தில் தூக்கி வீசி இருக்கிறார்கள் .
அதன் பின்னர் சுபாங்கி மரணம் குறித்து ஊராருக்கும் தெரியவில்லை. இதனால் போலீஸ் வழக்கிலிருந்தும் தப்பிவிட்டதாக உறவினர்களும் குடும்பத்தினரும் நினைத்து இருந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் சுபாங்கியை காணவில்லை என்பது அறிந்த மக்கள் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது தான் ஆணவக் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து சுபாங்கியின் தந்தை , தாய்மாமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர் போலீசார்.
சுபாங்கியின் எலும்புகளை போலீசார் தேடி வருகின்றனர்.