பேயிங் கெஸ்ட் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரு.நாகராஜன் உதவியாளர் சிறையிலடைப்பு

 
ka

 தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் அலுவலக உதவியாளர் பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  பேயிங் கெஸ்டாக தங்கியிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 மும்பையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இதற்காக அவர் சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பக்தவத்சலம் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் தங்கியிருக்கிறார்.   ரிங்கி என்பவரோடு இவர் பேயிங் கெஸ்டாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கிறார்.   தரைதளத்தில் ரிங்கியின் சகோதரர் பவன் வசித்து வருகிறார்.

bh

 ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் பவன்.   இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு. நாகராஜனுக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் அலுவலக உதவியாளராகவும் இருந்து வருகிறார்.

 இந்த நிலையில் தனது சகோதரியுடன் தங்கியிருக்கும் அந்த பெண்ணை தனது அறைக்கு  வருமாறு அழைத்திருக்கிறார் பவன்.   தரையில் கிடந்த குப்பையை சுத்தம் செய்யச் சொல்லி சத்தம் போட்டிருக்கிறார்.    உங்கள் அறையை நான் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

 அப்போது அந்தப் பெண்ணின் மேலாடையை கிழித்து அவரை சரமாரியாக அடித்து இருக்கிறார்.  தோள்பட்டை , மார்பு என்று பல இடங்களில் கைகளால் சரமாரியாக தாக்கி இருக்கிறார்.  ஆபாசமாக திட்டி அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் அந்த பெண் போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரிடம் இருந்து அந்தப் பெண்ணை மீட்டிருக்கிறார்கள்.  உடனே பழவந்தாங்கல் போலீசுக்கு தகவல் அளிக்க,  போலீசார் விரைந்து வந்து பவனை கைது செய்து உள்ளனர்.   பவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.