தன் மனைவி என்று நினைத்து போதையில் வேறு ஒருவரின் மனைவியை சரமாரி குத்தி கொன்ற பயங்கரம்
தன் மனைவி என்று நினைத்து போதையில் வேறு ஒருவரின் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார் மாட்டு வியாபாரி. இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த மனைவியை, ’’நீ இங்கே தான் இருக்கிறாயா?’’ என்று அவரையும் சரமாரியாக குத்தி சாய்த்து இருக்கிறார். ஆம்பூரில் நடந்திருக்கிறது இந்த பயங்கர சம்பவம்.
திருவண்ணாமலையில் மாவட்டத்தில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். மாட்டு வியாபாரியான இவர் இவரது மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். மனைவியின் இறப்புக்கு பின்னர் தொடர்ந்து மாட்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார் தேவேந்திரன்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்து விட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் தேவேந்திரனிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி ஆம்பூருக்கு சென்றிருக்கிறார் தனலட்சுமி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரனிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு ஆம்பூருக்கு சென்று இருக்கிறார். ஆம்பூரில் உள்ள கடைகளின் முன்பாக இரவு நேரத்தில் தூங்குவதாக தேவேந்திரனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என்ற ஆத்திரத்தில் கத்தியுடன் அங்கு சென்று இருக்கிறார்.
இதற்கிடையில் ஆம்பூர் கம்பிகொள்ளை பகுதியைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதனால் அவரது மனைவி கவுசர், ரெண்டு பெண் குழந்தைகள் ,ஒரு ஆண் குழந்தை, மாமியாருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறார். நேற்று ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே இருக்கும் நேதாஜி சாலையில் கடைகளுக்கு முன்பாக இரவு நேரங்களில் ஆதரவற்றவர்கள் பிச்சை எடுப்பவர்கள் படுத்து தூங்கும் இடத்தில் கவுசர், அவரது மாமியார் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். கவுசரும், மாமியாரும் பர்தா அணிந்திருந்திருக்கிறார்கள். தூரத்தில் தேவேந்திரன் மனைவி தனலட்சுமி தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
நள்ளிரவில் ஒரு மணிக்கு போதையில் தனலட்சுமியை கொல்வதற்காக அங்கு வந்திருக்கிறார் தேவேந்திரன். பர்தா அணிந்திருந்ததால் இருட்டில் அடையாளம் தெரியாமல் தனது மனைவி தனலட்சுமி தான் என்று நினைத்து கவுசரின் கழுத்து, மார்பு, உடல் என்று சரமாரியாக குத்தி இருக்கிறார் . இதில் அலறடியடுத்து கவுசர் எழுந்த போதுதான், அது தன் மனைவி அல்ல என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த அலறல் சத்தத்தில் தூரத்தில் படுத்திருந்த தனலட்சுமி எழுந்து திடுக்கிட்டு பார்த்திருக்கிறார்.
அப்போது அவரை பார்த்த தேவேந்திரன், ’’நீ இங்கேதான் படுத்து இருக்கிறாயா?’’ என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடி, அவரையும் சரமாரியாக குத்தி சாய்த்து இருக்கிறார் . சரமாரியான கத்திக்குத்தில் கவுசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் கவுசர் உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, தேவேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.