மனைவியை நிர்வாணமாக்கி சூடு வைத்து சித்திரவதை செய்த கணவன்
நடத்தையில் சந்தேகம் வந்ததால் மனைவியை நிர்வாணமாக்கி உடலில் சூடு வைத்து துன்புறுத்தி வந்திருக்கிறார் கணவர். இதனால் அந்தப் பெண் போலீஸில் கண்ணீருடன் சென்று புகார் அளிக்க, அந்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் மங்கலம்பேட்டை அடுத்த கோ. பவழங்குடி காலனி. இப்பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 24 வயது ஆகிறது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருக்கிறார் .
இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் லாரி டிரைவருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். சந்தேக புத்தியால் கணவன் அடித்து சித்திரவதை செய்வதை தாங்கமுடியாத அந்தப் பெண் கடந்த 2 மாதங்களாக தாய் வீட்டிற்குச் சென்று குழந்தைகளுடன் அங்கேயே இருந்து வந்திருக்கிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பாக லாரி டிரைவர் மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்ததும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சரியான சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மனைவியை நிர்வாணமாக்கி உடலில் சூடு வைத்து துன்புறுத்தி இருக்கிறார்.
இந்த சித்திரவதைகளை இதற்கு மேல் தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்தப் பெண் நேராக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணின் கணவரான லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.