கணவருக்கு பிறந்த குழந்தையை விட்டுவிட்டு காதலனுக்கு பிறந்த குழந்தையை கொன்ற தாய்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்கிற 19 வயது இளைஞருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள். அதில் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.
இது குறித்து அறிந்த பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும், மோகன் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து விட்டனர். இதன் பின்னர் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு தினேஷ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த மோகன்ராஜுடன் சிறுமிக்கு திருமணம் நடந்திருக்கிறது.
அந்த தம்பதிக்கு ஐந்து மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சிறுமி இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அன்று மதியம் வீட்டில் இருந்த வாலி தண்ணீரில் இரண்டு வயது சிறுவன் தினேஷ் மூழ்கி விட்டதாக சொல்லி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார் அந்த பெண். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் குண்டடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது . இதை அடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் தினேஷின் தாயிடம் விசாரணை நடத்தி வந்தனர் . அப்போது தினேஷின் தாயும் காதலன் மோகன்ராஜும் திட்டமிட்டு குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக நாடகமாடியது அம்பலமாக இருக்கிறது. உண்மை தெரிய வந்ததும் போலீசார் இருவரையும் கைது செய்து உள்ளனர்.
போக்சோ சட்டத்தில் சிறைக்கு சென்ற மோகன்ராஜ் ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் காதலியுடன் பழகி வந்திருக்கிறார். வழக்கிற்கும் இருவரது தொடர்புக்கும் இடையூறாக இருப்பதாக நினைத்துதான் தினேஷை இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.