என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை - தற்கொலைக்கு முன் துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்த மாணவி
அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாம்பாட்டி நாயக்கர் தெரு. இப்பகுதியில் வசித்து வரும் அரசு பேருந்து ஓட்டுநர் மகேஸ்வரன். இவரது மகள் அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி வீட்டிற்குள் இருந்த அறைக்குள் பள்ளி சீருடையை மாற்ற சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதவை தட்டி பார்த்திருக்கிறார்கள். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் பயந்து போய் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியிருந்திருக்கிறார்.
இதைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் மாணவியை மீட்டுள்ளனர். பின்னர் ஆத்தூர் நகர போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் தற்கொலைக்கு முன்பாக மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது. ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார். அதில், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், யாரையும் துன்புறுத்த வேண்டாம் என்றும் மாணவி எழுதி வைத்திருக்கிறார்.
இந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், மாணவி படித்த அரசு பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை மாணவிக்கு பள்ளியில் ஈவ்டீசிங் பிரச்சனை இருந்ததா? இந்த வேறு ஏதேனும் காரணமா? அவரின் தற்கொலைக்கு தூண்டியது யார் ? என்பது குறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.