பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்
தன்னுடன் வாழ மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த கணவர் பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மதுரையில் தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா . 19 வயதான இந்த இளம் பெண் மதுரை கீரைதுறை பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இதற்கு வர்ஷாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.
கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வர்ஷாவுக்கும் பழனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்து வாழ்ந்து வந்திருக்கிறார் வர்ஷா .
இந்த நிலையில் வீட்டின் அருகே வர்ஷா சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபரால் பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்த ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார்.
அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் சொல்ல, சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வாசல் போலீசார் வர்ஷாவின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர் . போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வர்ஷாவின் கணவர் பழனி மீது சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் பழனியிடம் விசாரிப்பதற்காக கீரை துறையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள் போலீசார். இது தெரிந்ததும் முன்கூட்டியே கீரை துறை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்திருக்கிறார் பழனி. அங்கு போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக பழனி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.