திருமணமான பின்னும் கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய பெண்ணை சரமாரியாக குத்திய இளைஞர்
ஓசூர் அருகே திருமணமான பின்னும் கள்ளக்காதலை தொடர வலியுறுத்திய பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு சரணடைந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பெளத்தூர் கிராமத்தை சேர்ந்த சேகர்(31) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த வினோதா(37) என்கிற பெண்ணிற்கும் 2017 ம் ஆண்டு முதல் கள்ளதொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சேகர் 2020ம் ஆண்டு சிந்து என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் வினோதா, சேகரை கள்ளக்காதலை தொடர வலியுறுத்தி வந்ததாகவும் இதனால் சேகருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வினோதாவின் டார்ச்சரை தாங்க முடியாத சேகர், தாலப்பள்ளி கிராம ஏரிக்கரை அருகே கூலி வேலை செய்து வந்த வினோதாவை கத்தியால் வயிறு,கழுத்து,கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இருந்த வினோதாவை அப்பகுதியினர் மீட்டு ஒசூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த வினோதா தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய சேகர், பாகலூர் போலிசில் நடந்ததை கூறி சரணடைந்ததை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


