ஓடும் பஸ்சில் காதலியை கத்தியால் குத்தி விட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞர்
ஓடும் பஸ்ஸில் காதலியை கத்தியால் குத்தி விட்டு தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார் இளைஞர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
கேரள மாநிலத்தில் வயநாடு மூலங்கா பகுதியைச் சேர்ந்தவர் சனில். 25 வயதான இந்த இளைஞர் கோட்டயம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு சீதா என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். அவர் தமிழக எல்லையில் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான அந்த இளம் பெண் ஆலுவா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.
இருவரும் முதலில் நண்பராக பழகி வந்த நிலையில் பின்னர் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களுக்கும் சில தினங்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் மூணாறு பகுதியில் இருந்து பெங்களூருக்கு செல்லும் கேரளா அரசு பேருந்தில் அங்கமாலி பகுதியில் சீதா ஏறி இருக்கிறார். எடப்பால் என்கிற இடத்தில் சனில் ஏறி இருக்கிறார்.
சீதா அமர்ந்திருந்த சீட்டிற்கு அடுத்த சீட்டில் சனில் அமர்ந்திருக்கிறார். அப்போதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது . இந்த வாக்குவாதம் முற்றி இருக்கிறது . அப்போது கண்டக்டர் , இளைஞர் சனிலை வேறு சீட்டில் மாற்றி அமரும்படி சொல்லி இருக்கிறார். அதன்படியே சனில் வேறு சீட்டில் மாற்றி அமர்ந்திருக்கிறார். இரவு 11:30 மணியளவில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலி சீதாவைப் குத்தி இருக்கிறார்.
இதை பார்த்து பேருந்து பயணிகள், பஸ் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் . உடனே தன் கழுத்தை தானே சனில் கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கிறார். இருவருமே மயங்கி விழுந்திருக்கிறார்கள். உடனே அங்கிருந்து பஸ்ஸில் இருந்த பயணிகள், பேருந்து ஊழியர்கள் இருவரையும் மீட்டு திருவரங்காடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இளைஞர் சனில்.