செங்கல்சூளை தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை - சக தொழிலாளி கைது!
ஈரோடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல்சூளை தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பாறையூரை சேர்ந்தவர் முருகேசன் (57). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், முருகேசன் கடந்த மாதம் 24ஆம் தேதி புதுக்கரடியானூர் அருகே கல்லால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், அதே பகுதியை சேர்ந்த செங்கல்சூளை தொழிலாளி குமார் (40) என்பரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் குமார், முருகேசனை கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து, கொலையாளி குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.