மாமியாரை கழுத்தறுத்து கொன்ற மருமகள்! பகீர் பின்னணி
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார் தலை முடியை பிடித்து கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு மருமகள் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (79). இவரது மகள் வழி பேத்தியான தேவியை (36) தனது மகன் பழனிவேலுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். பழனிவேல் போக்குவரத்துத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3 ஆண்டு காலமாகவே மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று (10.08.25) இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது மாமியார் அய்யம்மாளை, பேத்தியும் மருமகளுமான தேவி தலை முடியை பிடித்து கழுத்தை நெறித்து தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மருமகள் தேவி வேட்டவலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சரணடைந்த தேவியிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் உள்ள அய்யம்மாள் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமியார் மருமகள் சண்டையில் முன்விரோதம் காரணமாக மாமியாரை மருமகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வேட்டவலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


