"அடப்பாவி நீயா இதெல்லாம் பண்ணது" - ஆவடியை கலக்கிய மாஜி அரசு ஊழியர் கைது!
சென்னையிலுள்ள ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே இருந்தன. இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்த காவல் துறை, டு தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் திருடு போன இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இச்சூழலில் பருத்திப்பட்டு சோதனைச்சாவடியில் தனிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் வந்துள்ளார். அவரைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையின்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்ச்செல்வன் (38) என்றும், அவர் முன்னாள் அரசு ஊழியர் என்றும் தெரியவந்தது. மேலும் சிசிடிவி கேமராவில் பதிவானது இவர் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகனங்களை திருடுவதும், குறிப்பாக அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் சாவியுடன் விட்டு சென்றவர்களின் வாகனங்களை மட்டுமே தமிழ்ச்செல்வன் திருடுவதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த 11 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். அரசு துறையில் ஊழியராக பணியாற்றிய அவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.