மதுவுக்கு அடிமையான கணவரை உறவினர்கள் உதவியுடன் கொலை செய்த மனைவி
மதுவுக்கு அடிமையாகி கொடுமைபடுத்திய கணவரை உறவினர்களுடன் துணையுடன் கொலை செய்த மனைவியை போலீசார் பிடித்தனர்.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே வாசன் வேலி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (40). இவர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர், மதுவுக்கு அடிமையாகி தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தனது மனைவி தனலட்சுமியை குடிபோதையில் கொடுமைப்படுத்திய நிலையில், பலமுறை தனலட்சுமிக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் சிவலிங்கத்துடன் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
நேற்றும் வழக்கம் போல் சிவலிங்கம் குடித்து விட்டு வந்து மனைவி தனலட்சுமியை அடித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தனலட்சுமி தனது உறவினர்களுடன் கணவரை இரும்பு ராடால் அடித்துள்ளார். அதில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்ததை மறைத்து கணவரின் உடலை மறைக்க உடலை சாக்கு பையில் கட்டி அதை ஆம்னி வேனில் வைத்து ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் ஆம்னி வேனை சோதனையிட்டதில் சிவலிங்கம் உடலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசாருக்கும் பின்னர் சோமரசம்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி சிவலிங்கத்தின் மனைவி தனலட்சுமி, தனலட்சுமியின் உறவினர்களான ஆறுமுகம், சுமதி ஆகியோரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய செந்தில் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூவரை கைது செய்த சோமரசம்பேட்டை போலீசார் தனலட்சுமியை கொடுமைப்படுத்தியதால் தான் சிவலிங்கத்தை அவர்கள் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.