இதுகெல்லாமா கொலை செய்வாங்க... கணவனை அடித்துக் கொன்ற மனைவி, மகன்

 
murder

தலைவாசல் அருகே குடும்பத் தகராறு கணவனை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.

murder

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (57). இவர் ஆத்தூர் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆதிமூலத்திற்கு வளர்மதி (48) என்ற  மனைவியும் கலைச்செல்வன் (20) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஆதிமூலத்திற்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆதிமூலம் தனது வீட்டிற்கு வருவதை நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஆதிமூலம் இன்று விடுமுறை நாள் என்பதால் இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில்  இருந்த அவரது மனைவி வளர்மதி ஆதிமூலத்திடம் இவ்வளவு நாட்கள் வராமல் இப்பொழுது இங்கு எதற்கு வந்தீர்கள்? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது வளர்மதியை ஆதிமூலம் அடித்ததாக கூறப்படுகிறது. வளர்மதியின் சத்தத்தை கேட்ட வீட்டில் படுத்திருந்த கலைச்செல்வன் எழுந்து வந்து ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று தந்தையிடம் கேட்டு சத்தம் போட்டு உள்ளார். 

இதில் ஆதிமூலத்திற்கும் அவரது மனைவி மற்றும் மகன் இடையே வாய் தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஆவேசம் அடைந்த கலைச்செல்வனும் அவரது தாயார் வளர்மதியும் ஆதிமூலத்தை இரும்பு கம்பியால் அடித்துள்ளார்கள். இதில் படுகாயம் அடைந்த ஆதிமூலம் மயக்கம் அடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார். அதைத் தொடர்ந்து  ஆதிமூலத்தின் வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பார்த்தபோது அங்கு ஆதிமூலம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இதுகுறித்து  தலைவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

murder

அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆதிமூலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சம்பவ இடத்தில் விசாரணை செய்த போலீசார்  வழக்கு பதிவு செய்து ஆதிமூலத்தின் மனைவி வளர்மதி அவரது மகன் கலைச்செல்வன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வளர்மதியும் அவரது மகன் கலைச்செல்வனையும் தலைவாசல் போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழியரை அவரது மனைவி மற்றும் மகன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


.....