மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவன்
அரக்கோணம் அருகே பானாவரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஓம் பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் பானவரம் ஹாஸ்பிடல் தெருவை சேர்ந்த சந்தியா(22) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் பேரரசி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓம் பிரகாஷ் மாமியார் வீடான பானாவரத்திலேயே மனைவி, மகளுடன் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் மனைவி சந்தியாவிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஓம் பிரகாஷ் மனைவி சந்தியாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சந்தியா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பாணவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பேரில் அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் பானாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் ஓம் பிரகாஷை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.