அரசு மருத்துவமனை வளாகத்தில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

 
ச் ச்

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமியை பார்க்க வந்த உறவினர்களிடையே ஏற்பட்ட மோதலால் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடக்கவுஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(31). இவர் திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார்.‌ இவரது தங்கை பிரியா, அவரது கணவர் கார்த்திகேயன் மற்றும் மகளுடன் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் முன்பு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகளை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்குச் சென்ற கருப்பசாமி எதற்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தீர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது தானே என பேசி திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை பார்ப்பதற்காக கருப்பசாமியின் அக்காள் கணவர் குலசிவேலு (51) அங்கே வந்துள்ளார்.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்ட அவர் நாய் கடிக்கு அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கருப்பசாமி குலசி வேலுவை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குலசிவேலு தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்பசாமி கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மயங்கி விழுந்த கருப்பசாமிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குலசிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.