குடும்ப தகராறில் மாமனார் அடித்துக்கொலை - மருமகன் வெறிச்செயல்!

 
murder

அரியலூர் அருகே குடும்ப தகராறில் மருமகன் பிவிசி பைப்பால் தாக்கியதில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த மெய்க்காவல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(61). விவசாயி. இவரது மகள் ஜெயந்தி. இவருக்கும், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த திலக் என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே, கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு திலக் ஜெயந்தியை செல்போனில் அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திலக் நேற்று மெய்க்காவல் புதூரில் உள்ள ஜெயந்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஜெயந்தி கதவை பூட்டிக்கொண்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 

ariyalur

இதனால் ஆத்திரமடைந்த திலக் பிசிவி குழாயை எடுத்து உடைக்க முயன்றுள்ளார். அப்போது, வெளியே வந்த மாமனார் செல்வராஜை, திலக் பிவிசி குழாயால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை குடும்பத்தினர் மீட்டு ஜெயங்கொணடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார், செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் மனைவி தேவகி அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.