மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகன்

வேதாரண்யம் அருகே செம்போடையில் மாமனாரை கட்டையால் அடித்து கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் சுப்பிரமணியன் (வயசு 70). விவசாயியான இவர், இவரது மனைவியுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் தமிழ்செல்வி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுமார் 16 ஆண்டுகள் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு செந்தில்குமார் வந்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்செல்வி- செந்தில்குமார் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றார். மகள் தமிழ்செல்வி வீட்டிற்கு தந்தை சுப்பிரமணியன் நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது மருமகன் செந்தில்குமார் அங்கு வந்து மனைவி தமிழ்செல்வியிடம் தகராறு செய்து உள்ளார். அப்பொழுது மாமனார் சுப்பிரமணியன் சமாதனம் செய்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் செந்தில்குமார், வீட்டில் இருந்த கயிற்று கட்டில் கால் கட்டையை உடைத்து எடுத்து மாமனாரை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாமனார் சம்பவம் இடத்திலே இறந்து விட்டார்.
இது குறித்து சுப்பிரமணியன் மனைவி வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மருமகன் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.