பேருந்து நிறுத்தத்தில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன்! அதிர வைக்கும் காரணம்

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அடுத்த முத்தூரில் சொத்து தகராறு தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா சிவந்திபட்டி அருகே உள்ளது முத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பூலையா - லட்சுமி தம்பதியருக்கு ஒரே மகன் கணேசன். தந்தை பூலைய்யா 70 வயதை தொட்ட நபர். விவசாயம் செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். சமீபத்தில் இவரது தந்தை கொம்பையாவின் ( தோட்டமாக இருந்த இடம் ) சொத்துக்களை விற்கும் சூழல் ஏற்பட்டு அதனை விற்றுள்ளார். அந்த பணம் ஒரு கோடியே 40 லட்சம் வரை வந்துள்ளது. அதனை தன் உடன் பிறந்த சகோதரிகளுக்கு பிரித்து கொடுத்துவிட்டு, தனது ஒரே மகனான கணேசனுக்கும் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கணேசன் தன் மகளுக்கு தங்க நகையாக எடுத்துள்ளார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து தனது வீட்டை இடித்து கட்டுவதற்கு கூடுதலாக 10 லட்சம் கேட்டு தந்தை பூலைய்யாவிடம் தகராறு செய்துள்ளார் மகன் கணேசன். இந்த தகராறு முற்றவே இன்று காலை உடல்நல குறைவால் சிகிச்சை எடுத்து வந்த தந்தை பூலைய்யா இன்று வழக்கம் போல் முத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மகன் கணேசன், பணம் கேட்டு தந்தையை மிரட்டி சண்டை போட்டுள்ளார். பணம் கொடுக்க முடியாது என்று கூறிய தந்தையை 70 வயதை தொட்ட வயதானவர் என்று கூட பாராமல் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். தகவலறிந்து ஊரே வேதனைக்கு உள்ளானது. வயதான தந்தைக்குப் பிறகு அனைத்து சொத்துக்களும் மகனுக்கு தான் கிடைக்கும் என்ற நிலையில் பணம் மீது கொண்ட ஆசையில் தந்தையை வெட்டிக் கொன்றது ஒட்டுமொத்த ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சிவந்திபட்டி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்த மகன் கணேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.