தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன்
பவானி அருகே தாயின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மைலம்பாடி, சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மனைவி ராக்கம்மாள் (65). இவர்களின் மகன் பழனிச்சாமி (46). மூவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. திருமணமான பழனிச்சாமி, கடந்த 15 வருடங்களாக திருமணமாகி மனைவியைப் பிரிந்து, தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். முருக்கு மாஸ்டரான பழனிச்சாமி, வீட்டிலேயே முருக்கு, மிக்சர் தயாரித்து வீடுகள், கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். ராக்கம்மாள் கோவில்களில் கற்பூரம் ஊதுபத்தி விற்கும் வேலை செய்து வந்துள்ளார், இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த பொதுமக்களுடன் கோவில் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட தகராறில் ராக்கம்மாள் தாக்கப்பட்டதால் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், நாள்தோறும் அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதம் செய்வதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் என தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சாணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி பின்புறம் உள்ள காலி இடத்தில் ராக்கம்மாளும், கணவர் ராமகிருஷ்ணனும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. ராமகிருஷ்ணன் வீடு திரும்பிய நிலையில், ராக்கம்மாளைக் காணவில்லை. இதனால், மகன் பழனிச்சாமி, உறவினரான பாலமுருகன் அழைத்துக் கொண்டு சுற்றுப்புறப் பகுதியில் தேடிச் சென்றுள்ளார். அப்போது ராக்கம்மாள் பள்ளியின் பின்புறம் தலையில் பலத்த ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர், தொடர்ந்து பழனிச்சாமி கதறி அழுதுள்ளார் மேலும் உடன் சென்ற அவருடைய உறவினரான பாலமுருகன் போலீஸ் கன்ட்ரோல் என 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் ராக்கம்மாளின் உடலைக் கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக கணவர் ராமகிருஷ்ணன், மகன் பழனிச்சாமி ஆகியோரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மகன் பழனிச்சாமி, தாயைக் கொலை செய்தது உறுதியானது.
விசாரணையில், ராக்கம்மாள் அடிக்கடி வெளியே சென்று தகராறு செய்வதால் பலரும் பழனிச்சாமியிடம், உனது அம்மாவை அடக்கி வைக்குமாறு கூறி வந்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரத்தில் பழனிச்சாமி இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினமான ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பழனிச்சாமிக்கும் அவரது தாய் ராக்கம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராக்கம்மாள் பழனிச்சாமியை பார்த்து மனைவியை வைத்து பிழைக்க தகுதியில்லை என அவதூறாகப் பேசியுள்ளார். இதைக் கேட்ட பழனிச்சாமி, ராக்கம்மாளை அடித்து கீழே தள்ளினார். இதில், கோபமடைந்த ராக்கம்மாள், மேலும் மகனென்றும் பாராமல் பழனிச்சாமியை தரக்குறைவாக பேசியுள்ளார். ஏற்கெனவே போதையில் இருந்த பழனிச்சாமிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது அடுத்து அருகில் இருந்த கல்லை எடுத்து, தாயின் தலையில் போட்டுக் கொலை செய்தாக தெரிவித்துள்ளார், போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்பதால் தாயைக் காணவில்லை என தகவல் தெரிவித்ததோடு, தேடுவது போல் நாடகமாடியும்ள்ளார். இருந்தபோதிலும் போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலமானது. இதைத் தொடர்ந்து பழனிச்சாமியைக் கைது செய்த பவானி போலீசார், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைத்தனர்.


