கூல் ட்ரிங்சில் மது கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம்- திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி
சேலத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட முயன்ற இரும்பு வியாபாரி போக்சோ வழக்கில் கைது செய்யபட்டார்.

சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி மதுபானம் கலந்த குளிர்பானத்தை அதிக அளவில் அருந்தியுள்ளார் என்று காவல்துறையினரிடம் கூறினார்.
இது குறித்து அழகாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அழகாபுரம் பகுதியில் மாணவி மயங்கி விழுந்து கிடந்த இடத்தின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வாலிபர் ஒருவர் மாணவியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, அழைத்து வந்து சாலையோரம் இறக்கி, படுக்க வைத்து சென்றது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. பின்னர் அதில் இருந்த வாலிபரின் அடையாளத்தை வைத்து, விசாரணை நடத்தி சேலம் அழகாபுரம் அருகே ராமன்குட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி(36) என்பது தெரிய வந்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கோவிந்தசாமி, அழகாபுரம் அருகே பழைய இரும்பு கடை வைத்துள்ளதாகவும், தனது கடைக்கு அருகே உள்ள பள்ளியில் படித்த மாணவி ஒருவர், அவ்வப்போது அருகே உள்ள இரும்பு கடைக்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட, மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு கோவிந்தசாமி பள்ளி மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது கோவிந்தசாமி மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதில் மாணவிக்கு போதை தலைக்கு ஏறியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கோவிந்தசாமி மாணவியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற போது, திடீரென மாணவிக்கு வலிப்பு வர பயந்து போன கோவிந்தசாமி மயங்கி நிலையில் இருந்த பள்ளி மாணவியை, தனது இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அழகாபுரம் பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அழகாபுரம் போலீசார் இரும்பு கடை வியாபாரி கோவிந்தசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


