ரயில்வேயில் வேலை... 26 பேரிடம் ரூ.37 லட்சம் - மோசடி செய்த ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை!
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த ஸ்ரீராமன் என்பவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம் தோப்பூரில் உள்ள அரசு உயர் நிலை ஆசிரியர் பி.ஆதிமணி என்பவர் சேர்ந்து 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் ரயில்வேயில் பொது மேலாளர், கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோர் ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து 26 பேரிடம் 37 லட்ச ரூபாய் அளவிற்கு பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் இருவரும் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வந்த புகாரில் விசாரணை நடத்திய சிபிஐ காவல்துறையினர் ஐசிஎஃப் ஸ்ரீராமன், ஆசிரியர் ஆதிமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐசிஎஃப் ஸ்ரீராமன் தலைமறைவானதை தொடர்ந்து ஆசிரியர் ஆதிமணி மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்தது நிரூபணமாவதாகக் கூறி ஆசிரியர் ஆதிமணிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.