நடத்தையில் சந்தேகத்தால் கொடூரம்... மகளை சரமாரியாக வெட்டிக்கொன்ற தந்தை!

 
rmd murder

ராமநாதபுரம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மகளை, தந்தையும், சகோதரனும் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த தோப்படைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதி. விவசாயி. இவருக்கு வினோத்குமார் என்ற மகனும், அழகேஸ்வரி  என்ற மகளும் உள்ளனர். அழகேஸ்வரிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அழகேஸ்வரி கணவரை பிரிந்து, தோப்படைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

police

இந்த நிலையில், அழகேஸ்வரிக்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக தந்தை ஆதிக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆதி மகளை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். இதற்காக ஆதி, அவரது மகன் வினோத்குமார் ஆகியோர், நேற்று அழகேஸ்வரியை விவசாய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். தொடர்ந்து, ஆதி, கோவிலங்குளம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

கொலை நடந்த பகுதி பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் பின்னர் அவர் பேரையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பாட்டார். அங்கு ஆதியை கைது செய்த போலீசார், கொலை செய்யப்பட்ட அழகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய வினோத்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.