“செல்போனில் வேறு ஒருவருடன் சேட்டிங்”- காதலி, அவரது தாயை கொடூரமாக கொன்ற காதலன்

ஆறு மாதங்களாக காதலித்து வந்த காதலி வேறு ஒருவருடன் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்து வந்ததால் காதலியுடன், அவரது அம்மாவையும் கத்தியால் வெட்டி கொலை செய்த காதலனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த முகமது சல்மா (38), ஜாம்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் மஜீத்தை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 16 வயது சானியா என்ற மகள் உள்ளனர். அப்துல் மஜீத்தின் முதல் மனைவிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு அப்துல் மஜீத் இறந்துவிட்டதால் சல்மா மகள் சானியாவுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜமுந்திரி ஹுகும்பேட்டையில் குடியேறி வசித்து வந்தனர். முகமது சானியா சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சென்று வந்துள்ளார்.
சல்மா மற்றும் சானியாவுடன் அப்துல் மஜீத்தின் முதல் மனைவியின் இளைய மகன் உமர், அவர்களது வீட்டில் வசித்து வந்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு, காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தற்போது ஐதராபாத்தில் வசிக்கும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லி சிவகுமார் அங்கு லைட் பாயாக வந்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறியது. ஆனால் சில மாதங்களாக சானியா, போனில் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்ற சந்தேகம் சிவக்குமாருக்கு ஏற்பட்டது. இந்த சூழலில், ஒரு வாரத்திற்கு முன்பு ஐதராபாத்திலிருந்து சானியாவின் வீட்டிற்கு வந்தார் சிவகுமார். அந்த நேரத்தில், சானியா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை தொடங்கியது.
இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது அப்துல் மஜீத்தின் முதல் மனைவியின் மகன்களான முகமது அலி மற்றும் உமர், சிவகுமாரிடம் பேசி அனுப்பி வைத்தனர். நேற்று உமர் மீண்டும் ஆட்டு இறைச்சியை வாங்கி கொண்டு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததால் , ஜன்னலின் வழியாக பார்த்தபோது சல்மாவும், சானியாவும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக 100-க்கு போன் செய்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பொம்முரு இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாத் மற்றும் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பதை பார்த்து உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. நரசிம்ம கிஷோர், சட்டம் ஒழுங்கு ஏஎஸ்பி ஏவி சுப்பராஜு, டிஎஸ்பிக்கள் வித்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர். உமரிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து முகமது அலியின் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாத் வழக்கை விசாரித்து வருகிறார். தலைமறைவான சிவகுமார் தான் கொலை செய்தது உறுதி செய்த நிலையில் போலீசார் கோவூர் அருகே சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.