மது போதை... அக்கா மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற இளைஞர் தானும் தற்கொலை

 
s

மது போதையில் அக்காவையும் அக்கா மகனையும் இரும்பு கம்பியால் அடித்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Image.               

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட ஆறாவது வார்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் ஆனந்தி (வயது 40). இவரது கணவர் இறந்த நிலையில் 13 வயதுடைய நிஷாந்த் மகன் மற்றும் ஆனந்தியின் சகோதரரான பாண்டீஸ்வரன் ஆகிய மூவரும் ஒரே வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாண்டீஸ்வரன் மது போதைக்கு அடிமையான நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்து வீட்டில் இருந்த அக்கா ஆனந்தி மற்றும் அவரது மகன் நிஷாந்த் இருவரையும் இரும்பு கம்பியால் தலையில் கொடூரமாக தாக்கியதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேலும் அக்கா மற்றும் அக்கா மகன் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி இளைஞர் பாண்டீஸ்வரனும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காலை வெகு நேரமாக மூவரும் வெளியே வராத நிலையில், பாண்டீஸ்வரனின் நண்பர்கள் தேடி வந்து பார்த்த பொழுது  பாண்டீஸ்வரன் தூக்கில் தொங்கிய நிலையிலும், பாண்டீஸ்வரனின் அக்கா ஆனந்தி படுகாயம் அடைந்த நிலையிலும் மற்றும் அவரது மகன் நிஷாந்த் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் விரைந்து வந்து சோதித்த பொழுது ஆனந்தி படுகாயம் அடைந்த நிலையில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் வடகரை காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாண்டீஸ்வரன் மற்றும் அவரது அக்கா மகன் நிஷாந்த் ஆகிய இருவரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இளைஞரின் இச்செயல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.